Thursday, April 05, 2012

திருக்குர்ஆன் விளக்கவுரை-- தொடர்: 7


கியாம நாளின் அடையாளங்கள்
ஈஸா நபியின் வருகை
பி. ஜைனுல் ஆபிதீன்

உலக முடிவு நாள் மிகவும் நெருங்கும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவதும் ஓர் அடையாளம் என்பதைக் கடந்த இதழில் கண்டோம்.

ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர்.

எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது.

ஈஸா நபி இறைவனால் உயர்த்தப்பட்டார்கள்; இன்னும் மரணிக்கவில்லை; இறுதிக் காலத்தில் இறங்கி வருவார்கள் என்பதற்கான சான்றுகள்:

வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு சாட்சியாக இருப்பார்.

(திருக்குர்ஆன் 4:159)

ஈஸா நபியவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.

இவ்வசனத்தில் வேதமுடையோர் என்று குறிப்பிடப்படுவதில் யூதர்களும், கிறித்தவர்களும் அடங்குவார்கள். இவ்விரு சாராரும் ஈஸா நபியை ஏற்பார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

யூதர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான எதிரிகளாக இருந்தனர். ஈஸா நபியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. "தவறான வழியில் பிறந்தவர்' என்றெல்லாம் ஈஸா நபியை விமர்சனம் செய்தனர்.

கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை நம்பினாலும், மதித்தாலும் அவரை எவ்வாறு நம்ப வேண்டுமோ அவ்வாறு நம்பவுமில்லை; எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவுமில்லை. கடவுளின் மகன் என்று அவர்கள் நம்பினார்கள்.

எனவே, இவர்களும் ஈஸா நபியை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

இவ்விரு சாராரும் எதிர்காலத்தில் ஈஸா நபியை நம்புகின்ற நிலைமை உருவாகும் என்பதை இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது.

இந்த முன்னறிவிப்பை மக்கள் புரிந்து கொள்ளாத வகையில் சிலர் தவறான மொழிபெயர்ப்புச் செய்துள்ளதால் அதை முதலில் சுட்டிக் காட்டுவோம்.

"அவரை நம்பிக்கை கொள்ளாமல்'' (இல்லா லயூமினன்ன பிஹி) என்ற சொற்றொடரில் "அவரை' என்ற சொல் யாரைக் குறிக்கும்? ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்று அனைத்து அறிஞர்களும் எந்தக் கருத்து வேறுபாடும் இன்றி ஒருமித்துக் கூறுகின்றனர். இதற்கு முந்தைய வசனங்களில் ஈஸா நபியைப் பற்றிப் பேசி வருவதால் அது ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்பதில் எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்கவில்லை. இதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.

இதே வசனத்தில் இடம் பெற்றுள்ள "அவரது மரணத்திற்கு முன்னர்'' (கப்ல மவ்திஹி) என்ற சொற்றொடரில் அமைந்த "அவரது' என்பது யாரைக் குறிக்கும்? இதில் தான் சிலர் தவறான கருத்துக்குச் சென்று விட்டனர்.

"வேதமுடையவர் ஒவ்வொருவரும் அவரது (அதாவது தனது) மரணத்திற்கு முன்னர்'' என்று அவர்கள் பொருள் கொண்டுள்ளனர்.

"அவரது மரணத்திற்கு முன்னர்'' என்றால் "ஈஸாவின் மரணத்திற்கு முன்னர்'' என்று பெரும்பாலானவர்கள் பொருள் கொண்டுள்ளனர்.

பல காரணங்களாôல் இதுவே சரியான மொழி பெயர்ப்பாகும்.

அரபு இலக்கணப்படி இரு விதமாகவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. இது போன்ற இடங்களில் எது சரியானது? எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொள்வது வழக்கம்.

ஆனால், இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளில் முதல் மொழி பெயர்ப்பு தவறானது என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் செல்லத் தேவையில்லை. முதல் மொழி  பெயர்ப்பின்படி கிடைக்கும் மொத்தக் கருத்து பொய்யாகவும், கேலிக்குரியதாகவும் அமைந்திருப்பதே இந்த மொழிபெயர்ப்பு தவறு என்பதைச் சந்தேகமற நிரூபித்து விடுகிறது.

முதல் மொழி பெயர்ப்பின் அடிப்படையில் இவ்வசனத்தின் கருத்தைப் பாருங்கள்!

"வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் தமது மரணத்திற்கு முன்னால் ஈஸா நபியை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாமல் மரணிக்க மாட்டார்கள்.''

இது தான் முதல் சாராரின் மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் கருத்தாகும்.

அதாவது வேதமுடையவர்களான யூதர்களும், கிறிஸ்தவர்களும் தாம் மரணிப்பதற்கு முன் ஈமான் கொண்டு விடுகிறார்கள்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் மரணிப்பதற்கு முன்னால் முஃமின்களாக மாறியே மரணிக்கிறார்கள். இன்னும் ஆழமாகச் சென்றால் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நரகமே கிடையாது. ஏனெனில், அவர்களின் கடைசி நிலை நல்லதாகவே அமைந்து விடுகிறது என்றெல்லாம் இந்த மொழி பெயர்ப்பின்படி கருத்து அமைகின்றது.

மற்றவர்களைப் போலவே யூதர்களும், கிறிஸ்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களுடன் இக்கருத்து மோதுகின்றது.

ஒவ்வொரு யூதரும், கிறிஸ்தவரும் மரணிக்கும் போது முஃமின்களாக மரணிக்கிறார்கள் என்ற கருத்தை எவருமே சரி என்று ஏற்க முடியாது.

இந்த மொழி பெயர்ப்பு தவறானது என்பது சந்தேகமறத் தெரியும் போது, "அவரது மரணத்திற்கு முன் - அதாவது ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் வேதமுடையவர்கள் ஈஸாவை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்'' என்ற இரண்டாவது மொழிபெயர்ப்பைத் தான் நாம் ஏற்றாக வேண்டும்.

இவ்வசனம் அருளப்படும் போது ஈஸா நபி மரணித்திருக்கவில்லை என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. ஏனெனில் அவர் மரணித்திருந்தால் "ஈஸா மரணிப்பதற்கு முன்னால்'' என்று கூற முடியாது. மேலும்,

"நம்பிக்கை கொண்டார்கள்'' என்று இறந்த கால வினையாகக் கூறாமல் "நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்'' என்று எதிர்கால வினையாகக் கூறப்பட்டுள்ளது. ஈஸா மரணிப்பதற்கு முன்னால் அவரை எதிர்காலத்தில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் நம்புவார்கள் என்பது தான் இவ்வசனத்தின் கருத்து.

இறைவனால் உயர்த்தப்பட்டுள்ள ஈஸா நபியவர்கள் இறங்கும் போது இந்த நிலை ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.

சாட்டிலைட் யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த யுகத்தில் விண்ணிலிருந்து ஒருவர் இறங்கினால் உலகின் அத்தனை செயற்கைக் கோள்களும் அவரைப் படம் பிடித்து நமது வீட்டு டி.வி. பெட்டியில் காட்டி விடும். இவ்வாறு அதிசயமாக ஒருவர் இறங்கும் போது அவர் கூறும் உண்மையை உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்யும்.

ஏற்கனவே மரணமடைந்த ஒருவரைப் பற்றி "அவர் மரணிப்பதற்கு முன்னால் இது நடக்கும்'' என்று கூறவே முடியாது.

ஈஸா நபியவர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நபிமொழியை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் "இதில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால் இவ்வசனத்தைப் பாருங்கள்'' என்று கூறியுள்ளதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

(பார்க்க: புகாரி 3448)

ஈஸா நபி மரணமடையவில்லை என்பதற்குச் சான்றாக இவ்வசனம் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வசனங்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது மேலும் உறுதியாகின்றது.

அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், "அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.

திருக்குர்ஆன் 4:156-159

ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.

ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு வேறொருவரைத் தான் யூதர்கள் கொன்றனர்.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள "உயர்த்திக் கொண்டான்' என்ற சொல் அந்தஸ்து உயர்வைத் தான் குறிக்கும் என்று சிலர் வாதிடுவர். இது தவறாகும்.

"அவரை உயர்த்திக் கொண்டான்' என்று மட்டும் கூறப்பட்டால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவாவது இடம் இருக்கும். ஆனால் "தன்னளவில்' என்பதையும் சேர்த்துக் கூறுவதால் அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை.

"ரபஅ' என்ற சொல்லுக்கு "அந்தஸ்து உயர்வு' என்று பொருள் கொள்வதாக இருந்தால் அந்தஸ்து, பதவி, புகழ், தகுதி என்பன போன்ற சொற்கள் அச்சொல்லுடன் சேர்க்கப்பட வேண்டும்.

"உயர்ந்த தகுதிக்கு அவரை உயர்த்தினான்'' என்று இத்ரீஸ் நபி பற்றி அல்லாஹ் கூறுகிறான்

(திருக்குர்ஆன் 19:57)

ஆனால் ஈஸா நபியைப் பற்றி இங்கே கூறும் போது அவரையே உயர்த்திக் கொண்டதாகக் கூறுகிறான். இதற்கு நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.

தொழுகையில் கைகளை நாம் உயர்த்திக் கட்டுகிறோம். இதைக் குறிப்பிடுவதற்கும் "ரபஅ' என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைகளின் அந்தஸ்தை உயர்த்துவது என்பது இதன் பொருளில்லை. கைகளையே உயர்த்துதல் என்பது தான் பொருள்.

மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் கூச்சலிட்டனர். "எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?'' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!  நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம். நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம். "அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி (எனக் கூறுவீராக.)

(திருக்குர்ஆன் 43:57-61)

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

கியாமத் நாளின் அடையாளம் என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதென்றால் அவர் அந்த நாளுக்கு மிக நெருக்கத்தில் உலகத்தில் வாழ வேண்டும். அப்போது தான் அவரை கியாமத் நாளின் அடையாளம் எனக் கூற முடியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரை கியாமத் நாளின் அடையாளம் என்று எப்படிக் கூற முடியும்?

ஈஸா நபியைப் பொறுத்த வரையில் அவர்கள் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார்கள்; ஆள் மாறாட்டம் செய்து வேறொருவரைத் தான் ஈஸா நபியின் எதிரிகள் கொன்றனர்.

அவர் இறைவனால் உயர்த்தப்பட்டார். உயர்த்தப்பட்டவர், இறுதிக் காலத்தில் யுக முடிவு நாளுக்கு நெருக்கத்தில் மீண்டும் வருவார்; மரணிப்பதற்காக அவர் இந்த உலகத்திற்கு மீண்டும் அனுப்பப்படுவார்; என்று நபிகள் நாயகத்தின் ஏற்கத்தக்க ஏராளமான பொன்மொழிகள் தெரிவிக்கின்றன.

கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்குகிறார்கள்.

'எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூற்கள்: புகாரி, முஸ்லிம்

நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாகக் கதையளந்தனர். 'யாரும் வாங்காத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்'' என்பதற்கு எந்தச் சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை.

முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் 'போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்தபோது இந்தத் தீய பண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை.

அவர் இறங்கக் கூடிய காலத்தில் 'இஸ்லாத்தைத் தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்'' என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்த பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை.

தஜ்ஜால் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்.

தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரலி),

நூல்: திர்மிதீ

இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை.

ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுக முடிவு நாள் வந்து விடும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

யுக முடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment