Thursday, October 06, 2011

குற்றங்களும் தண்டனைகளும் -தொடர் : 2

துரத்தும் பாம்புகள்
 ஏன். ராஜ் முஹம்மத் ஏம்.ஒ.ஏஸ்.ஸி,

செய்யாததை செய்ததாக சொல்பவனுக்குரிய தண்டனை
நாம் ஐவேளை கடமையான தொழுகைகளை தொழுவதில்லை. ஆனால்
பிறரை தொழுமாறு கட்டளையிடுவோம், அல்லது தீமையான காரியங்களில் மூழ்கியிருப்போம். ஆனால் தீமையை விட்டு பிறரை தடுப்போம். இதுப் போன்ற செயல்களை செய்பவர் மிகக் கடுமையான வேதனை செய்யப்படுவார். அதாவது நன்மையை ஏவிக்கொண்டு தாம்
அதைச் செய்யாமலும், தீமையைத் தடுத்துக்கொண்டு தாமே அதைச் செய்துகொண்டும் இருப்பருக்கு மறுமையில் கழுதை செக்கை இழுத்து வருவதைப் போன்று நரகத்தில் சுற்றிவருவார்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
அல்குர்ஆன் 61:2,3
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறுமை நாüல் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள்
அவரைச் சுற்றி ஒன்று கூடி, "இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு அவர், "நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால்
அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்'' என்று கூறுவார்.
நூல்கள் : புகாரி 3267, 7098, முஸ்லிம் 5713
குர்ஆனை கற்று அதனை செயல்படுத்தாமல் இருப்பவர்களுக்குரிய தண்டனை
சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை குர்ஆனை கற்பதற்கு மிக அதிகமாக ஆர்வம் காட்ட கூடியவர்களை நாம் காண்கிறோம். ஆனால்
குர்ஆனுடைய வரிகளை நாம் தெளிவாக அறிந்தாலும் அதனை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அல்லாஹ்வுடைய வார்த்தைக்கு மாறாக அனைத்து செயல்களையும் செய்ய கூடியவர்களாக இருக்கிறார்கள்.
உதாரணமாக : வட்டி வாங்க கூடாது, பொய் சொல்ல கூடாது, விபச்சாரம் செய்ய கூடாது, பெற்றோர்களை துன்புறுத்தக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் குர்ஆனுக்கு மாற்றமாக பெயர் தாங்கி முஸ்லிம்கள் இதனை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதே போல் அல்லாஹ்வுக்கு இணைவைக்கக் கூடாது என்றும், கடமையான தொழுகைகளை தொழ வேண்டும் என்றும், பர்ளான நோன்பை கடைபிடிக்க வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது. இதனை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்காமல், குர்ஆனை அலட்சியம் செய்கிறார்கள். இவ்வாறு செய்பவர்களுக்கு மறுமையில் மிகக் கொடுமையான வேதனையை
அல்லாஹ் தயார் செய்துள்ளான்.
......ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார்.
......தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு
அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும், அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல் : புகாரி 1386
விபச்சாரம் செய்தவர்களுக்குரிய தண்டனை
விபச்சாரம் என்பது தனி மனித ஒழுங்கீனம் மட்டுமல்ல, சமூகத்தையும் நாட்டையும் பாதிக்கின்ற மிகப் பெரிய சமூகத் தீமையாகும். விபச்சாரத்தால் குடும்ப உறவு, இல்லற அமைதி, மானம், பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாம் மட்டங்களிலும் பாதிப்பு உண்டாகும். எய்ட்ஸ் என்ற உயிர்கொல்லி நோய்களுக்கும் பாலியல் குற்றங்களே காரணம். எனவே விபச்சாரத்திற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.
விபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இரு பாலருக்கும் பொதுவானது. எனவே, விபச்சாரம் செய்யும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமான தண்டனை மறுமையில் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும்.
......அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும் போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள்.
...... அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி),
 நூல் : புகாரி 1386
வட்டி வாங்குபவர்களுக்குரிய தண்டனை
வட்டித் தொழில் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும். இதிலிருந்து வங்கிகளில் பணியாற்றுவது கூடாது என்று அறியலாம். வட்டியை கொடுப்பதும், வட்டியை வாங்குவதும், அதற்கு சாட்சியாக இருப்பதும், அதற்கு கணக்குகளை எழுதுவதும் தடை செய்யப்பட்டது.
வட்டியில் பல வகை உண்டு. தவணை வட்டி, கொடுத்த வட்டியை விடக் கூடுதல் தொகை பெறுவதே தவணை வட்டி ஆகும், அதாவது குறிப்பிட்ட தவணையில் கடன் (அசல்) தொகையை விடக் கூடுதல் தொகை பெறுவதாகும்.
வட்டி வங்கியில் கடன் பெறும் ஏழை ஒருவன் மருத்துவச் செலவு, அரிசி மற்றும் பருப்பு, பாடப் புத்தகம் போன்ற அவசியத் தேவைகளுக்காகவே கடன் வாங்குகிறான். அவனிடம் போய் அசலையும் கொடு, கூடுதலாக ஒரு தொகையை வட்டியாகவும் கொடு என்று கேட்பது எவ்வளவு பெரிய கொடுமை. மனிதாபிமானமற்ற இந்தச் செயலை மனித உள்ளம் படைத்த எவரும் ஆதரிக்கமாட்டார்கள்.
வசதி படைத்தவர்களும் வட்டிக்கு கடன் வாங்குவது உண்டு. புதிய தொழில் ஆரம்பிக்க பழைய தொழிலில் முதலீடு செய்ய எனப் பல நோக்கங்களுக்காக அவர்களும் கடன் வாங்குகிறார்கள். இந்த முதலைப் போட்டு அவர்கள் அடையும் இலாபத்தில் ஒரு பங்கை வட்டியாக வங்கிக்குச் செலுத்துவதால் அவர்களுக்கு என்ன பாதிப்பு என்று சிலர் கேட்கலாம்.
உண்மை அதுவன்று. கடன் கொடுத்த வங்கி இலாபத்தில் பங்கும் கேட்கும் அதே வேளையில் நஷ்டம் ஏற்பட்டால் அதையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமல்லவா? யாரும் அப்படிச் செய்வதில்லை. இது என்ன நியாயம்?
ஆக வட்டி முறையில் ஏராளமான பாதிப்புகளும் தவறுகளும் நடக்கின்றன. உழைப்பே இல்லாமல் பணம் சேர்த்தல் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே செல்வம் குவிதல், சந்தையின் இயல்பான போக்குத் தடைபடல், பணம் கொடுத்தவர்களுக்கு வறியவர்கள் அடிமை ஆகுதல். ஈவிரக்கமில்லாத முறையில் வட்டி வசூல், வட்டி கட்டமுடியாமல் மானத்துக்குப் பயந்து தலை மறைவு ஆகுதல். அல்லது தற்கொலை செய்து கொள்வது எனப்
பல சமூகத் தீமைகள் வட்டியை அனுமதிப்பதால் சட்ட அங்கீகாரம் பெறுகின்றன. இஸ்லாம் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து, வட்டிக்கு தடை விதித்தது. இந்த செயல்களில் ஈடுபடக்கூடியவர் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு தள்ளப்படுவார்கள்.
......நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றுகொண்டிருந்தார். அந்த
மனிதர் ஆற்றை விட்டு வெளியேற முயலும்போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப்பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார்.
......(இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித்தின்றவர்கள்.  அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல்:புகாரி 1386
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர்.
நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
அவர் யார்? என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன்: அதற்கவர்கள் ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்! எனக் கூறினார்கள்.  அறிவிப்பவர் : ஹமுரா (ரலி), நூல்:புகாரி 2085
வட்டித் தொழில் நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தை சாப்பிடுவர்கள் நிரந்தரமாக நரகத்தில் கிடப்பவர்கள்.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2:275
ஸகாத்தை நிறைவேற்றாததற்குரிய தண்டனை
ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள். 
"அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!. அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். "இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் 9:34
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்''
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: புகாரி (1408)
அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது
அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ
அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.             
 அல்குர்ஆன் 3:180
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எனது உயிர் எவன் கையிலுள்ளதோஅல்லது "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ' அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து
அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரிதாகவும் கொழுத்தாகவும் வந்து அவனைக் (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும்.  அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக
அனுப்பப்படும்.  இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்.’ 
அறிவிப்பவர் : அபூதர் (ரலி),
 நூல் : புகாரி 1460
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு
(அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை லி அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு,“"நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்' என்று சொல்லும் எனக் கூறிவிட்டு, பிறகு, "அல்லாஹ் தனது
பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர் கருமித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை
அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும் நீங்கள் செய்கின்றவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்'' எனும் (3:180 ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 1403
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (ஸகாத் கொடுக்காமல் பூட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்ட) உங்கள் கருவூலம் மறுமை நாüல் கொடிய விஷமுள்ள பாம்பாக மாறும். அதனைக் கண்டு அதன் உரிமையாளரான நீங்கள் வெருண்டோடுவீர்கள். ஆனால், அது உங்களைத் துரத்திக்கொண்டே வந்து "நான்தான் உனது கருவூலம்'' என்று சொல்லும். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உங்கள் கையை விரித்து அதன் வாய்க்குள் நுழைக்கும் வரை அது உங்களைத் துரத்திக்கொண்டே வரும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
 நூல் : புகாரி 6957
"பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு
அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒட்டகங்களின் உரிமையாளர்
அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால் லி தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்லி மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம்
அவர்மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஆடு, மாடுகளின் உரிமையாளர்
அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட
அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித் தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி
அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி
அவர் மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் (நிலை என்ன)?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப்
பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்; இன்னொரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்:
குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது அவனுக்குப் பாவச் சுமையாகும்.
குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின் (பராமரிப்பின்) விஷயத்திலும், (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன்
முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை  (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்.
குதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல் வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு "அந்தப் பசும்புல் வெளியில்' அல்லது "அந்தத் தோட்டத்தில்' அது மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர் ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட கயிற்றினைத் துண்டித்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகள், கெட்டிச் சாணங்கள் அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை. அதன் உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போதுஅதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம்
அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின் அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும் எனக்கு அருளப்பெறவில்லை; "எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்' எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 1803, புகாரி 2371, 2860
நாம் நம்முடைய செல்வத்திற்கு முறையாக ஸகாத்தை நிறைவேற்றி மறுமையின் தண்டனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோமாக!
வளரும் ஈன்ஷா ஆல்லாஹ்.

No comments:

Post a Comment