Sunday, January 01, 2012

திருடனின் கைவெட்டுவதை அல்லாஹ் தெளிவுபடுத்தவில்லையா

திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று திருக்குர்ஆன் 5:38 வசனம் கூறுகிறது. கை என்பது விரலில் இருந்து தோள் புஜம் வரையிலா? விரலில் இருந்து முழங்கை வரையிலா? விரலில் இருந்து மணிக்கட்டு வரையிலா என்பதற்கு குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ தெளிவுபடுத்தப்படவில்ல. சஹாபாக்களின் நடைமுறையை ஏற்காவிட்டால் இதற்கு தெளிவு கிடைக்காது. சஹாபாக்கள் திருடனின் மனிக்கட்டு வரை வெட்டியதை ஆதாரமாக்க் கொண்டு தான் இவ்வாறு முடிவு செய்கிறோம் என்று சிலர் வாதம் செய்கின்றார்கள். இந்த வாதம் சரியா?
அபூ அனூத், இலங்கை

பதில்

திருடனின் கைகளை எந்த அளவுக்கு வெட்ட வேண்டும் என்பதற்கு விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இப்படி கேள்வி கேட்டவர்களின் அறியாமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சஹாபாக்கள் விளக்கம் இல்லாமல் 5: 38 வசனத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று இவர்கள் வாதிடுவதன் மூலம் சஹாபாக்களுக்கு மதிப்பு சேர்ப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் இதன் மூலம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இழிவுபடுத்துகின்றனர். திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று சொன்ன அல்லாஹ் அதை தெளிவுபடுத்தாமல் குறைபடக் கூறி குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் என்று இவர்கள் சொல்லாமல் சொல்கின்றனர்.


இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 5:3

என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்களோ அல்லாஹ் மார்க்கத்தை முழுமைப்படுத்தவில்லை மற்றவர்கள் வந்து தான் அதை முழுமைப்படுத்தும் வகையில் குறைவுடைய மார்க்கத்தையே தந்துள்ளான் என்று இவர்கள் சித்தரிக்கின்றனர்.

நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்களோ அல்லாஹ்வுக்கு அவ்வளவாக விளக்கத் தெரியவில்லை; சஹாபாக்கள் தான் அல்லாஹ்வை விட நன்றாக விளக்கக்கூடியவர்கள் என்று சொல்லாமல் சொல்கின்றனர்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் விளக்குவதற்காக யாரை அல்லாஹ் அனுப்பினானோ அந்த தூதர் சில விஷயங்களை விளக்காமல் சென்று விட்டனர். என்று இவர்கள் நினைக்கின்றனர். அல்லது தூதருக்கு விளக்கத் தெரியவில்லை என்கின்றனர்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்ல வேண்டியதை முழுமையாக சொல்லி விட்டனர், மற்றவர்கள் வந்து அதில் எதையும் சேர்க்கும் அளவுக்கு பலவீனமாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் தரவில்லை என்பதை நம்புபவன் தான் முஸ்லிமாவான் என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும் ரசுலும் ஒரு விஷயத்தைச் சொல்லாமல் சஹாபாக்கள் அதைச் சொல்லி இருந்தால் அது அல்லாஹ் சொன்னதாக ஆகாது. அவர்களின் கருத்தாகத் தான் ஆகும். அதை ஏற்கவேண்டும் என்று ஆகவே ஆகாது. அதற்கு மார்க்க அந்தஸ்து எதுவும் வந்து விடாது. நாம் சிந்தித்துப் பார்த்து அந்த வசனத்தில் இருந்து எதை விளங்குகிறோமோ அதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும் அப்படித்தான் ந்மக்கு சொல்லிக் காட்டுகிறான்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர் ஆன் 16:44

அல்லாஹ் அருளிய வேத்த்தை அவனது தூதர் வழியாகக் கிடைக்கும் விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாத விஷயங்களில் நாம் சிந்தித்துப் பார்த்துத் தான் விளங்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் சொல்கிறது. குர்ஆனிலிருந்து சிந்தித்து விளங்கும் விஷயங்களும் குர்ஆனில் உள்ளடங்கி இருந்தது தான் என்பது இந்த வசனத்தில் இருந்து தெரிகிறது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றை குறிப்பாக சொல்லாமல் பொதுவாகச் சொன்னால் அதில் சிந்தனையைச் செலுத்தி காரணகாரியங்களுடன் ஆய்வு செய்து இதைத் தான் இவ்வசனம் சொல்கிற்து என்று ஆய்ந்து அறிவது தான் நம் மீது உள்ள கடமை.

திருடினால் கையை வெட்ட வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். எதுவரை வெட்ட வேண்டும் என்று அல்லாஹ் சொல்லவில்லை. இதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அளித்த விளக்கம் குறித்து பலவீனமான ஹதிஸ் இருந்தாலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.

கை என்பது இந்த இட்த்தில் எதை குறிக்கிற்து என்று நாம் தான் சிந்திக்க வேண்டும்.

கை என்பது விரலில் இருந்து தோள் புஜம் வரை உள்ள பகுதியைக் குறிக்கும் என்பது உண்மை தான். ஆனால் எல்லா மொழிகளிலும் மனிதர்களின் பேச்சுக்களிலும் பொதுவாக கை என்று சொன்னால் மனிக்கட்டு வரை உள்ள பகுதியைக் குறிக்கவே நாம் பயன்படுத்துகிறோம். வேறு அர்த்தம் தரும் வகையில் வாசக அமைப்பு இருந்தால் தவிர மற்ற சந்தர்ப்பங்களில்  மனிக்கட்டு வரை உள்ள பகுதியைத் தான் கை எனக் கூறுகிறோம்.

கையால் பிடி கையால் எடு கை கழுவு கையால் முஸாபஹா செய் என்றெல்லாம் சொன்னால் முழுக்கை என்று நாம் புரிந்து கொள்வதில்லை. மனிக்கட்டு வரை உள்ள பகுதி என்றே புரிந்து கொள்கிறோம்.

ஊசி போட கையை நீட்டு என்று மருத்துவர் கூறினால் ஊசி எங்கே போடுவர்கள் என்பது நமக்குத் தெரிந்துள்ளதால் முழுக்கையை நீட்டுகிறோம்.

கையைக் கட்டிக் கொள் என்று கூறினால் கட்டிக் கொள் என்ற வார்த்தை இணைந்துள்ளதன் காரண்மாக முழங்கை வரை கட்டிக் கொள்கிறோம்.

இப்படியெல்லாம் சொல்லாமல் வெறும் கை என்று சொன்னால் மனிக்கட்டு வரை உள்ள பகுதியைக் குறிப்பதற்குத் தான் நாம் பயன்படுத்துகிறோம். மனிதர்களின் பேச்சு வழக்கில் தான் குர்ஆன் அருளப்பட்ட்து. எனவே இவ்வசன்ம் தெளிவாகவே உள்ளது.

கையைக் கழுவ்விவிட்டு சாப்பிடு என்று கூறினால் தோள் புஜம் வரை கழுவ வேண்டும் என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். மனிக்கட்டு வரை என்று சொல்லா விட்டாலும் வேறு அர்த்தம் கொள்ளும் வகையில் வாசக் அமைப்பு இல்லாத்தால் இதன் அர்த்தமே மனிக்கட்டு வரை என்பது தான்.

இதை அல்லாஹ்வும் தந்து திருமறையில் தெளிவுபடுத்துகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:6

இவ்வசனத்தில் கைகள் என்று இரு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று உளூ செய்வது பற்றியும் மற்றொன்று தயம்ம்ம் செய்வது பற்றியும் பேசுகிறது. உளூ செய்வதைப் பற்றி பேசும் போது மூட்டுக்கள் முழங்கைகள்- வரை கழுவுங்கள் என்று அலாஹ் கூறுகிறான். ஆனால் தயம்மும் செய்வதைப் பற்றி பேசும் போது எந்த அளவும் கூறாமல் கைகள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

இதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் செயல் முறை விளக்கம் அளிக்கும் போது தரையில் உள்ளங்கையால் அடித்து முகத்தில் தடவிக் கொண்டார்கள். பின்னர் மனிக்கட்டு வரை கைகளில் தடவிக் கொண்டார்கள்.

பார்க்க புகாரி 342, 343, 339, 338

தயம்ம்ம் செய்யும் போது முழங்கை வரை அவர்கள் தடவவில்லை. பொதுவாக கை என்று கூறப்பட்டதால் மனிக்கட்டு வரை என்று செயல் விளக்கம் தந்துள்ளனர்.

கையை வெட்டுங்கள் என்று பொதுவாக அல்லாஹ் சொல்கிறான். மனிக்கட்டையும் தாண்டிய பகுதி என்று புரிந்து கொள்ள எந்த வாசகமும் இத்துடன் சேர்த்து சொல்லப்படவில்லை எனவே மனிக்கட்டு வரை என்று தான் இதை அறிவுடைய அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்பதால் அல்லாஹ் தெளிவாகவே சொல்லி இருக்கிறான். யாரையும் சார்ந்து விளங்கும் நிலையில் வைக்கவில்லை.

இப்படி விளங்குவது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பெருமை சேர்க்குமா? இவர்கள் செய்யும் வாதம் பெருமை சேர்க்குமா?
onlinepj


1 comment:

  1. Aday IWLo periya wilakkam ellam illama konjam short and sweet a point form la poatta moola illathawanukkum mandakki puriyum ,,,ithu unakku puriyalliya?? good job keep it up but simple and sweet..tc

    ReplyDelete