Thursday, May 03, 2012

அல்லாஹ்வை எப்படி நம்புவது? தொடர் :4

ஓதிப் பார்க்கலாமா?
உரை : பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை

நோய் ஏற்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள்.
நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்படும் போதல்லாம் அவர்கள் தமது உடலில் குல் என்றும் துவங்கும் அத்தியாயங்களை ஓதி ஊதி தமது கைகளால் தடவிக் கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு வயது முதிர்ந்து உடல் தளர்வு ஏற்பட்ட போது அவர்களின் மனைவி ஆயிஷா ரலி அவர்கள் ஓதி நபி (ஸல்) அவர்களின் கரத்தினால் உடல் முழுவதும் தடவி விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.
பாதுகாப்புக்கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பதும் ஓதி ஊதுவதும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவருக்காகப் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ("அல்முஅவ்விதாத்') ஓதி ஊதுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின்போது, நான் அவர்கள் மீது ஊதி அவர்களது கையாலேயே அவர்கள் மேல் தடவிவிட்டேன். ஏனெனில், அவர்களது கரம் எனது கரத்தைவிட வளம் (பரக்கத்) வாய்ந்ததாக இருந்தது.
ஆதாரம் முஸ்லிம் 4413
குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் பலக்அல் ஹம்து இது போன்ற அத்தியாயங்களை நோய் வரும் போது ஓதினால் அல்லாஹ் அதன் மூலம் நிவாரணத்தை ஏற்படுத்துவான்.
ஆனால் ஓதிப் பார்த்தலைப் பொறுத்தவரை இதைத் தொழிலாக செய்பவர்களிடம் சென்று ஓதிப் பார்ப்பதினால் பலன் ஏதும் ஏற்படப் போவதில்லை ஓதிப் பார்ப்பதைப் பொறுத்தவரை  நாம் ஆராய்ந்து பார்த்தால் அவரவர்கள் தான் ஓதிப் பார்க்க வேண்டுமே தவிர இது போன்ற புரோகிதர்களிடம் சென்று ஓதிப் பார்ப்பதை விட்டு விடவும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த நோய்க்கு நிவாரணத்தை ஏற்படுத்தும் சிறிய சூறாக்களை நாம் மனனம் செய்து வைத்திருந்தால் இவைகளை நோய் ஏற்படும் போதும் ஓதிக் கொள்ளலாம் தொழுகையின் போதும் ஓதிக் கொள்ள முடியும்.
நோயாளிக்கு பிறர் எப்போது ஓதிப் பார்க்கலாம்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவருக்காகப் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ("அல்முஅவ்விதாத்') ஓதி ஊதுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின்போது, நான் அவர்கள் மீது ஊதி அவர்களது கையாலேயே அவர்கள்மேல் தடவிவிட்டேன். ஏனெனில், அவர்களது கரம் எனது கரத்தைவிட வளம் (பரக்கத்) வாய்ந்ததாக இருந்தது.
ஆதாரம்: முஸ்லிம் 4413
எப்போது பிறர் ஓதிப் பார்க்க வேண்டும் என்பதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த  நபி மொழி நமக்கு ஆதாரமாக உள்ளது. 
எவற்றை நோய் நிவாரணத்திற்கு ஓதிப்பார்க்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அதை ஓதுவதன் மூலமும் நோய் நீங்கும்.
நோயாளிகளால் ஓத முடியாது போனால் மற்றவர்கள் ஓதலாம்.
இதன் அடிப்படையில் தான் அபூ சயீத் (ரலி) தேள் கடிக்கு ஆளானவருக்கு அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார்கள்.
ஓதிப்பார்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று நினைத்துக் கொண்டு புரோகிதர்களைத் தேடிச் சென்று ஓதிப்பார்க்கின்றனர். ஆனால் அவரவர் தனக்காக ஓதிக் கொள்வதே சரியான நடைமுறையாகும். மேலும் ஓதிப்பார்ப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அத்தியாயங்களும் துஆக்களும் எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்திருப்பவைதான்.
அல்லாஹ்வின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் அந்த வார்த்தைக்கு நோயை நீக்கும் ஆற்றல் உள்ளது என்று நம்பினால் அது அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். அதற்கு மாற்றமாக இன்று மனிதர்கள் அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் மதிப்பை மனிதனுக்குக் கொடுத்து அவர்களுக்கும் நோயை நீக்கும் தன்மை உள்ளதாக நினைக்கின்றோம்.
இன்னின்னாரிடத்தில் சென்று ஓதிப் பார்த்தால் நோய் நீங்கும் என்று நினைத்தால் இது புரோகிதம் ஆகும்.
சாதாரண நோய்களுக்கு நாம் நோய் நிவாரணத்தை நீக்கும் மாத்திரைகளை தெரிந்து வைத்திருக்கின்றோம். இது போன்று நோய் ஏற்படும் போது சிறிய நோய்களுக்கு சின்னச்சின்ன நோய் நிவாரணிகளை இன்றைய உலகில் நாம் பயன்படுத்தி வருகின்றது போல் சிறிய சூராக்களை நோய் ஏற்படுகின்ற போது ஓதுவதற்கு தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment