Monday, June 04, 2012

விரல் அசைத்தல் மறுப்புக்கு மறுப்பு- 01

 விரல் அசைத்தல் மறுப்புக்கு மறுப்புதொழுகையில் விரல் அசைத்தல் நபிவழி என்பதை ஆதாரத்துடன் சொல்லி வருகிறோம். ஆனால் இதை ஏற்காத மத்ஹப்வாதிகளும் ஹதீஸ் கலை பற்றிய ஞானமில்லாமல் தமக்குத் தாமே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்பவர்களும் சில பிரசுரங்களை வெளியிட்டு இது குறித்த ஹதீஸை பலவீனமானது என்பதை நிறுவ முயன்றுள்ளனர். இந்தப் பிரசுரங்களுக்கும் நூலுக்கும் அப்பாஸ் அலி தக்க மறுப்பை தயாரித்து அனுப்பியுள்ளார். அதை சரிபார்த்து தேவையான மாற்றங்கள் செய்து இங்கே வெளியிடுகிறோம்.
தொழுகையில் விரலசைப்பது தொடர்பான ஆய்வுக் கட்டுரை
தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் விரலை அசைப்பது பெரிய சர்ச்சைக்குரிய சட்டமாக இன்றைக்கு சிலரால் சமுதாயத்தில் ஆக்கப்பட்டு விட்டது.
இருப்பில் விரலை அசைப்பது நபிவழி என்றும் இந்த நபிவழியை தொழுகையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நாம் கூறி வருகிறோம். இதில் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் விரலை அசைப்பது நபிவழி இல்லை என்றும் தொழுகையில் விரலசைப்பது பித்அத் என்றும் கூறிவருகின்றனர்.
மனோ இச்சைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அல்லாஹ்விற்குப் பயந்து நபிமொழிகளைப் படிப்பவர்கள் இதில் குழப்பம் அடைய மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் விரலசைத்தார்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறிந்து கொள்வார்கள். இந்த நபிவழியை கேலியும் கிண்டலும் செய்ய மாட்டார்கள்.
மனோஇச்சையை மார்க்கமாகக் கொண்டவர்கள் இந்தச் செய்தியில் எழுப்பும் தேவையற்ற சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவான பதிலை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆய்வுக் கட்டுரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளோம். முதல் பகுதியில் விரலசைப்பது நபிவழி என்பதற்கான ஆதாரங்களையும் இந்த நபிவழிக்கு எதிராக வைக்கப்படும் தவறான வாதங்களுக்கு முறையான பதிலையும் தெளிவுபடுத்துவோம்.
இரண்டாம் பகுதியில் விரலசைப்பது கூடாது என்பவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக்க் காட்டும் செய்திகளின் உண்மை நிலையையும் அதற்கான சரியான விளக்கத்தையும் கூறுவோம்.
முதல் பகுதி
இருப்பில் விரலசைப்பதற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாக அமைந்துள்ளது.
879أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي
வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன்.
அப்போது அவர்கள், எழுந்து நின்று "தக்பீர்' கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராகக் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் தம் வலக் கையை இடது முன் கை, மணிக்கட்டு, முழங்கை (ஆகிய மூன்றின்) மீதும் வைத்தார்கள். அவர்கள் "ருகூஉ' செய்ய விரும்பியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகக்) கைகளை உயர்த்தினார்கள். (பின்னர்) தம் கைகளை மூட்டுக்கால்களின் மீது வைத்தார்கள். பின்னர் தமது தலையை ("ருகூஉ'விலிருந்து) நிமிர்த்தியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் "சஜ்தா' செய்தார்கள். அப்போது தம் உள்ளங்கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து எழுந்து) அமர்ந்தார்கள். அப்போது இடக் காலை விரித்து வைத்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நூல் : நஸாயீ 870
விரல் அசைத்தல் தொடர்பான இந்த செய்தி செய்தி தாரமீ (1323), அஹ்மத் (18115), ஸஹீஹ் இப்னு ஹுஸைமா (814), ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (பாகம் 5, பக்கம் 170), தப்ரானீ கபீர் பாகம் 22, பக்கம் 35), பைஹகீ (பாகம் 1, பக்கம் 310), ஸுனனுல் குப்ரா (பாகம் 1, பக்கம் 376), அல்முன்தகா இப்னுல் ஜாரூத் (பாகம் 1, பக்கம் 62) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக்கொண்டிருந்தார்கள் என இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. இதை வாயில் பின் ஹுஜ்ர் என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார்.
இந்த நபித்தோழர் ஹள்ர மவ்த் என்ற ஊரைச் சேர்ந்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள் என்பதைக் கவனித்து அறிவதற்காகவே அவர் மதீனா வந்தார். நபி (ஸல்) அவர்கள் தொழும் முறையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு செயலையும் நன்கு கவனித்துள்ளார்.
இதை மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன் என்று இந்த நபித்தோழர் குறிப்பிடுகின்றார்.
எனவே நபி (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற இந்த நபித்தோழரின் கூற்று தெளிவானதும் உறுதியானதுமாகும்.
இதே ஹதீஸ் தாரமியிலும் இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்தியில் இருப்பில் விரலசைப்பதை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் வாசகம் இடம்பெற்றுள்ளது.
1323 حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى قَالَ ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخْذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا قَالَ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ عَلَى النَّاسِ جُلَّ الثِّيَابِ يُحَرِّكُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ رواه الدارمي
இதற்குப் பிறகு குளிர் காலத்தில் நான் மறுபடியும் வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்த நிலையில் அந்த ஆடைகளுக்குள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தைப் பார்த்தேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல் : தாரமீ (1323)
நபி (ஸல்) அவர்கள் மட்டுமின்றி நபித்தோழர்களும் தொழுகையில் விரலசைத்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது.
தவறான வாதங்கள்
1 ஆஸிம் பின் குலைப் பலவீனமானவரா?
விரலசைத்தல் சம்பந்தப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஆஸிம் பின் குலைப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இப்னுல் மதீனீ அவர்கள் இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று விமர்சனம் செய்துள்ளார்கள். இதை அடிப்படையாக வைத்து சிலர் விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று கூறுகின்றனர்.
ஆஸிம் பின் குலைப் பல அறிஞர்களால் நம்பகமானவர் என்று நற்சான்று அளிக்கப்பட்டவர். இவர் நம்பகமானவர் என்று இமாம் அஹ்மது, இமாம் நஸாயீ, இமாம் அபூ ஹாதிம், இமாம் அஹ்மது பின் ஸாலிஹ், இமாம் இப்னு சஅத், இமாம் யஹ்யா பின் மயீன், இப்னு ஷிஹாப், இப்னு ஷாஹீன், இமாம் இஜ்லீ மற்றும் பலர் கூறியுள்ளனர். இமாம் அலீ பின் மதீனீ அவர்கள் மட்டுமே இவரைப் பற்றி குறை கூறியுள்ளார்.
ஒரு அறிவிப்பாளரைப் பற்றிக் குறை சொல்லப்பட்டால் அந்தக் குறை என்ன என்று தெளிவாகக் கூற வேண்டும். அவ்வாறு கூறினால் மட்டுமே அதைப் பரிசீலனை செய்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பாக ஒருவரைப் பற்றி பலர் நல்லவர், சிறந்தவர், நம்பகமானவர் என்று கூறியிருக்கும் போது குறை சொல்பவர் அவரின் குறையைத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அவரின் விமர்சனம் எந்த மதிப்பும் இல்லாததாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படும். இதுவும் ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ள விதியாகும்.
இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது ஆஸிம் பின் குலைப் என்பவரை இப்னுல் மதீனீ அவர்களைத் தவிர அனைவரும் பாராட்டியுள்ளனர், நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் இவரைப் பற்றி விமர்சனம் செய்யும் இப்னுல் மதீனீ அவர்கள் அவர் தனித்து அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று காரணம் ஏதும் இல்லாமல் கூறியுள்ளார். ஆஸிம் பலவீனமானவர் என்பதற்கு ஏற்கத்தகுந்த எந்தக் காரணத்தையும் இப்னுல் மதீனீ அவர்கள் தெளிவுபடுத்தவில்லை.
மேலும் இப்னுல் மதீனீ அவர்கள் அறிவிப்பாளரை விமர்சனம் செய்வதில் கடினப்போக்குள்ளவர். நம்பகமானவர்களைப் பலவீனமானவர்கள் என்று தவறுதலாக கூறக்கூடியவர். இதை இமாம் இப்னு அபீ ஹாதிம் அவர்கள் அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
الجرح والتعديل لابن أبي حاتم (7 / 73):
يكتب حديثه (سئل أبو زرعة عن فضيل بن سليمان فقال لين الحديث روى عنه علي بن المديني وكان من المتشددين -) . 
அலீ பின் மதீனீ அவர்கள் அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்வதில் கடினப்போக்குள்ளவராக இருந்தார் என அபூ சுர்ஆ தெரிவித்தார்.
நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் : 7 பக்கம் : 73
ஆஸிம் பின் குலைபைப் பற்றி மற்ற அறிஞர்கள் அனைவரும் நல்லவிதமாக கூறியிருக்கும் போது இமாம் இப்னுல் மதீனீ அவர்கள் மட்டும் காரணம் கூறாமல் விமர்சனம் செய்துள்ளதால் இமாம் இப்னுல் மதீனீ அவர்கள் அறிவிப்பாளர் ஆஸிம் விஷயத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
ஆஸிம் பின் குலைப் நம்பகமானவர் என்பதால் இவரிடமிருந்து நான்கு ஹதீஸ்களை இமாம் முஸ்லிம் அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள். எனவே ஆஸிம் பின் குலைப் இமாம் முஸ்லிம் அவர்களிடத்திலும் நம்பகமானவர் ஆவார்.
ஆஸிம் பின் குலைப் இடம்பெற்ற ஒரு செய்தியை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சரியான செய்தி என்று கூறியுள்ளார்கள். இமாம் இப்னு ஹஜர் அவர்களைப் பொறுத்தவரை ஒரு அறிவிப்பாளர் விசயத்தில் அறிஞர்களின் ஒட்டமொத்த கருத்தையும் கவனத்தில் கொண்டு இறுதியாக சரியான முடிவை எடுக்கக்கூடியவர்.
ஆஸிம் பின் குலைப் பற்றி அலீ பின் மதீனீ அவர்கள் செய்த விமர்சனத்தை இந்த இமாம் கண்டுகொள்ளாமல் ஆஸிம் பின் குலைப் நம்பகமானவர் என்ற முடிவையே எடுத்துள்ளார். எனவே இப்னுல் மதீனீ அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இருப்பில் விரலசைப்பது தொடர்பான செய்தி ஆதாரப்பூர்வமானது என்பதை சான்றுகளுடன் நிறுபித்து விட்டோம். மேலதிக தகவலுக்காக பின்வரும் தகவல்களைக் கூறுகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் ஆட்காட்டி விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று இமாம் நவவீ அவர்கள் நற்சான்று அளித்துள்ளார்கள்.
خلاصة الأحكام (1 / 428):
1391 - وَعَن وَائِل: " أَنه وصف صَلَاة رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ وَذكر وضع الْيَدَيْنِ فِي التَّشَهُّد قَالَ: ثمَّ رفع أُصْبُعه، فرأيته يحركها يَدْعُو بهَا " رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد صَحِيح.
நூல் : குலாசதுல் அஹ்காம் பாகம் : 1 பக்கம் : 428)
இமாம் இப்னுல் முலக்கீன் அவர்கள் இந்த ஹதீஸ் சரியானது என்று நற்சான்று அளித்துள்ளார்.
البدر المنير (4 / 11):
عَن وَائِل بن حجر رَضِيَ اللَّهُ عَنْه أَنه وصف صَلَاة رَسُول الله - صَلَّى الله عَلَيْهِ وَسلم - وَذكر وضع الْيَدَيْنِ فِي التَّشَهُّد، قَالَ: ثمَّ رفع أُصْبُعه فرأيته يحركها يَدْعُو بهَا . هَذَا الحَدِيث صَحِيح رَوَاهُ الْبَيْهَقِيّ فِي سنَنه بِهَذَا اللَّفْظ بِإِسْنَاد صَحِيح،
நூல் : அல்பத்ருல் முனீர் பாகம் : 4  பக்கம் : 11
திரித்துக் கூறப்பட்ட ஹதீஸ் கலை விதி
ஒரு அறிவிப்பாளர் குறித்து பல அறிஞர்கள் நம்பகமானவர் என்றும் ஒரே ஒரு அறிஞர் பலவீனமானவர் என்று கூறினால் அந்த ஒரு அறிஞரின் கூற்றைத் தான் எடுக்க வேண்டும் என நாம் கூறுவதாகச் சிலர் பொய் கூறி வருகின்றனர்.
இந்த விதியை நாம் ஏற்றுக் கொண்டதாகவும் எனவே இதனடிப்படையில் விரலசைப்பதற்கு ஆதாரமாக நாம் கூறும் ஹதீஸ் பலவீனமானது என்றும் நிறுவ முயற்சிக்கின்றனர்.
ஆனால் இவர்கள் நாம் கூறாத விதியை இவர்களாக்க் கற்பனை செய்துகொண்டு நமக்கு பதில் தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.
இவர்கள் கூறுவது போன்ற விதியை என்றைக்கும் நாம் சொன்னதில்லை. அதனடிப்படையில் எந்த ஹதீஸையும் பலவீனம் என்று கூறியதில்லை.
ஒரு அறிவிப்பாளர் குறித்து பல அறிஞர்கள் நல்ல விதமாகவும் ஒரு அறிஞர் குறையும் கூறினால் அப்போது குறை கூறிய அறிஞர் குறைக்கான காரணத்தை தெளிவாகக் கூறியுள்ளாரா? என்று பார்ப்போம்.
தக்க சான்றுடன் தெளிவாக குறை கூறப்பட்டிருந்தால் அதைக் கூறியவர் ஒருவராக இருந்தாலும் அவருடைய கூற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்று முடிவெடுப்போம்.
அந்த ஒரு அறிஞர் குறைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தாமல் மூடலாக விமர்சனம் செய்திருந்தால் அப்போது அவருடைய கூற்றை எடுக்காமல் மற்ற அறிஞர்களின் கூற்றையே எடுப்போம். இது தான் நமது நிலைபாடு.
ஹதீஸ் கலை அறிஞர்கள் குறை கூறப்பட்டுவிட்டதா? என்று மட்டும் பார்க்க மாட்டார்கள். கூறப்பட்ட குறை காரணத்துடன் தெளிவாக உள்ளதா? என்பதையும் சேர்த்துத் தான் அறிஞர்கள் பார்ப்பார்கள். விமர்சனம் தெளிவில்லாமல் பொத்தாம் பொதுவாக கூறப்பட்டிருந்தால் அது நிராகரிக்கப்படும்.
விரலசைப்பதற்கு ஆதாரமாக உள்ள ஆஸிம் பின் குலைபுடைய ஹதீஸில் இந்த நிலைபாட்டிற்கு மாற்றமாக நாம் முடிவெடுக்கவில்லை. மாறாக இந்த விதியின் அடிப்படையில் ஆஸிம் விஷயத்தில் இப்னுல் மதீனீ அவர்கள் கூறிய குறை தெளிவின்றி இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளாமல் அந்த ஹதீஸ் சரியான ஹதீஸ் என்று முடிவெடுத்துள்ளோம்.
அறிவிப்பாளர் அபூ பல்ஜ் அவர்களுடைய அறிவிப்பின் நிலை
பலருக்கு மாற்றமாக ஒரு அறிஞர் குறை கூறினாலும் அதை ஏற்க வேண்டும் என நாம் கூறியதாக இவர்களாக ஒரு விதியைக் கற்பனை செய்து கொண்டனர். இந்த விதியின் அடிப்படையில் பின்வரும் செய்தியை பலவீனம் என்று நாம் கூறுவதாகவும் வாதிடுகின்றனர்.
4535حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ أَخْبَرَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بَلْجٍ عَنْ زَيْدٍ أَبِي الْحَكَمِ الْعَنَزِيِّ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّهَ عَزَّ وَجَلَّ وَاسْتَغْفَرَاهُ غُفِرَ لَهُمَ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது கைகொடுத்து மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வை புகழந்து அவனிடம் அவ்விருவரும் பாவமன்னிப்புத் தேடினால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : அபூதாவுத் (4535))
இந்தச் செய்தியில் அபூ பல்ஜ் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி பல அறிஞர்கள் நல்லவிதமாகக் கூறினாலும் சில அறிஞர்கள் குறை கூறியுள்ளதால் குறை கூறிய அறிஞர்களின் கூற்றின் அடிப்படையில் இது பலவீனமானது என்று நாம் கூறியதாக வாதிடுகின்றனர்.
அபூ பல்ஜுடைய விசயத்தில் அவர் பலவீனமானவர் என்று நாம் முடிவெடுத்ததைப் போன்று ஆஸிம் பின் குலைபுடைய விசயத்திலும் அவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். எனவே இந்தச் செய்தியின் உண்மை நிலையை நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
அறிவிப்பாளர் அபூ பல்ஜ் குறித்து சில அறிஞர்கள் நல்லவிதமாக்க் கூறினாலும் சிலர் இவரைப் பற்றி குறை கூறியுள்ளனர். இமாம் புகாரி அவர்களும், இமாம் யஹ்யா பின் மயீன் அவர்களும் குறைக்கான காரணத்தை தெளிவுபடுத்தாமல் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். ஆனால் இவரை குறை கூறிய மற்ற அறிஞர்கள் குறைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளனர்.
இவரைப் பற்றி குறை கூறிய அறிஞர்கள் ஆஸிம் விசயத்தில் இப்னுல் மதீனீ குறைக்கான காரணத்தை தெளிவுபடுத்தாமல் விமர்சனம் செய்தது போன்று விமர்சனம் செய்யவில்லை.
மாறாக இவரிடத்தில் உள்ள குறையை தெளிவாக்க் குறிப்பிட்டுள்ளனர். இவர் நம்பகமானவராக இருந்தாலும் தவறிழைக்கக் கூடியவர் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சில வேளைகளில் தவறிழைப்பார் என்று கூறியுள்ளார். இமாம் அஹ்மது அவர்கள் இவர் தவறான செய்திகளை அறிவிக்கக்கூடியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முஸாபஹா பற்றிய இந்தச் செய்தியில் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் அபீ ஷஃசாயி என்பவர் அறிவிக்கின்றார். இவர் நம்பகமானவர் என்று முடிவு செய்வதற்கு ஏற்கத் தகுந்த எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
மேலும் இந்தச் செய்தியை அபூ பல்ஜிடமிருந்து ஹுஸைம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் தத்லீஸ் எனும் இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர் என இமாம்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதாவது தனக்கு அறிவித்த அறிவிப்பாளரைப் போக்கிவிட்டு தான் கேட்காத அறிவிப்பாளரிடமிருந்து கேட்டதைப் போன்ற தோரணையில் அறிவிப்பார். இவரைப் போன்றவர்கள் நான் கேட்டேன் எனக்கு அறிவித்தார் என கேட்டதை உறுதிபடுத்தும் வாசகத்தை கூறினால் தான் இவர்களுடைய அறிவிப்பு ஏற்கப்படும்.
ஆனால் மேற்கண்ட ஹதீஸில் ஹுஸைம் அபூ பல்ஜிடம் நேரடியாக்க் கேட்டதைத் தெளிவுபடுத்தும் வகையில் எந்த வாசகத்தையும் கூறவில்லை என்பதால் இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாகின்றது.
எனவே தெளிவான சான்றுகளின் அடிப்படையில் பலவீனமாக உள்ள இந்த ஹதீஸை விரலசைப்பது தொடர்பான ஹதீசுடன் ஒப்பிடுவது முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சு போடும் செயலாகும்.
பலவீனமான அறிவிப்பாளர் இப்போது பலமுள்ளவராக மாறிவிட்டாரா?
தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவுக்குச் செல்லும் போதும், ருகூவிலிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு ஹதீஸில் மட்டும் பின்வருமாறு உள்ளது.
حدثنا هناد حدثنا وكيع عن سفيان عن عاصم بن كليب عن عبد الرحمن بن الأسود عن علقمة قال قال عبد الله بن مسعود ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة قال وفي الباب عن البراء بن عازب قال أبو عيسى حديث ابن مسعود حديث حسن وبه يقول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين وهو قول سفيان الثوري وأهل الكوفة
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்,  நபிகள் நாயகம் (ஸல்) தொழுதது போல் தொழுது காட்டட்டுமா? என்று கூறி விட்டுத் தொழுது காட்டினார்கள். ஒரு தடவை தவிர அவர்கள் கைகளை உயர்த்தவில்லை.
நூல்: திர்மிதி 238
ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை ஆஸிம் பின் குலைப் தான் அறிவிக்கிறார்.
அதன் காரணமாக இந்த ஹதீஸை பலவீனம் என்று கூறும் நீங்கள் விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸை மட்டும் ஏற்பது ஏன்? என்று மத்ஹப் உலமாக்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஒரு அறிவிப்பாளரை ஒரு நேரத்தில் பலவீனமானவர் என்று கூறிவிட்டு மற்றொரு நேரத்தில் பலமுள்ளவர் என்று மாற்றிக் கூறுவது முரண்பாடாக இல்லையா? என்றும் கேட்கின்றனர்.
ஒரு தடவை தான் கையை உயர்த்த வேண்டும் என்ற ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மையே! நம்மைப் போல் இன்னும் ஏராளமான அறிஞர்களும் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வதில்லை.
ஆனால் அதற்கு இவர்கள் கூறுகின்ற ஆஸிம் பின் குலைப் அறிவிக்கிறார் என்ற காரணத்திற்காக அந்த ஹதீஸை நாம் நிராகரிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையின் துவக்கத்திலும், ருகூவின் போதும், ருகூவிலிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்தியுள்ளனர் என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு ஏராளமான வழிகளில் அறிவிக்கப்படுவதற்கு முரணாக ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள் என, ஒரே ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் அமைந்துள்ளது. அதிகமானவர்கள் அறிவிப்பதை மறுக்கும் வகையில் ஒரே ஒருவரின் அறிவிப்பு இருந்தால் அந்தக் காரணத்திற்காக ஒரே ஒருவரின் அந்த ஹதீஸை ஏற்காமல் அதிகமானவர்களின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தான் இப்னு மஸ்ஊத் (ரலி) ஹதீஸை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுகிறோம்.
அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்பதற்கு ஆஸிம் பின் குலைப் பலவீனமானவர் என்று நாம் கூறவில்லை. ஆசிம் பின் குலைபுக்கு பதிலாக யாராலும் குறை கூறப்படாத ஒருவர் அறிவித்தாலும் இந்த முடிவைத் தான் நாம் எடுப்போம். எனவே இந்த வாதமும் தவறான அடிப்படையின் மேல் எழுப்பப்பட்ட வாதமாகும்.
விரலசைப்பது பற்றி வரும் ஹதீஸ் ஷாத் வகையைச் சேர்ந்த பலவீனமான செய்தியா?
விரலசைப்பது தொடர்பான ஹதீஸை ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆயினும் இவரைத் தொடர்புபடுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சில மவ்லவிகள் செய்து வருகின்றனர்.
அவர்கள் செய்யும் விமர்சனம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன் ஹதீஸ் துறை சம்பந்தமான ஒரு விதியைப் புரிந்து கொண்டால் விளங்குவதற்கு எளிதாக இருக்கும்.
ஒரு செய்தியை சலீம் என்பவரிடமிருந்து ஐந்து பேர் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐந்து பேரில் நால்வர் ஒரு விதமாக அறிவிக்கிறார்கள். ஒருவர் மட்டும் அந்தச் செய்தியை அதற்கு முரணாக அறிவிக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் நால்வர் அறிவிப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நேர் முரணாக அறிவிப்பவர் நம்பகமானவராக இருந்தாலும் இவர் அறிவிப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் அறிவிப்பது ஷாத் - அரிதானது - எனக் கூறப்படும்.
ஏனெனில் ஒருவரிடம் தவறு ஏற்படுவதை விட நால்வரிடம் தவறு ஏற்படுவது அரிதாகும். எனவே தங்கள் ஆசிரியர் கூறியதாக நால்வர் கூறியதை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரியர் கூறியதாக ஒருவர் கூறுவதை மறுத்து விட வேண்டும்.
விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸில் இந்த அம்சம் உள்ளது என்பதே இவர்களின் விமர்சனம்.
அதாவது நபிகள் நாயகம் தொழுத முறையை
வாயில் பின் ஹுஜ்ர் அறிவிக்கிறார்.
வாயில் பின் ஹுஜ்ர் கூறியதாக குலைப் அறிவிக்கிறார்.
குலைப் கூறியதாக அவரது மகன் ஆஸிம் அறிவிக்கிறார்.
ஆஸிம் கூறியதாக
1-சுப்யான்
2- காலித் பின் அப்துல்லாஹ்
3-இப்னு இத்ரீஸ்
4-ஸாயிதா
ஆகிய நால்வர் அறிவிக்கின்றனர்.
இவர்களில் ஸாயிதா மட்டுமே விரல் அசைத்தலைப் பற்றிக் கூறுகிறார். மற்ற மூவரின் அறிவிப்பில் விரல் அசைத்ததாகக் கூறவில்லை.
காலித் பின் அப்துல்லாஹ், சுஃப்யான் ஆகியோர் இதைப் பற்றிக் கூறும் போது இஷாரா (சைகை) செய்தார்கள் என்றே கூறுகிறார்கள். இப்னு இத்ரீஸ் அறிவிக்கும் போது விரலை உயர்த்தினார்கள் என்று கூறுகிறார். ஆனால் ஸாயிதா மட்டும் விரலை அசைத்ததாகக் கூறுகிறார்.
ஆஸிமுடைய நான்கு மாணவர்களில் மூவர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஸாயிதா அறிவிப்பதால் இது ஷாத் என்ற தரத்திற்கு இறங்கி விடும். எனவே இது பலவீனமானதாகும் என்பது இவர்களின் விமர்சனம்.
ஹதீஸ் கலையை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டும். மேலோட்டமாக ஆராய்ந்தால் விபரீதமான முடிவுக்குத் தள்ளி விடும் என்பதற்கு இவர்களின் இந்த விமர்சனம் சான்றாகும்.
முரண்பாடும் கூடுதல் விளக்கமும்
ஒரு ஆசிரியரின் மாணவர்களில் பலர் அறிவிப்பதற்கு நேர்முரணாக ஒரு சிலர் அறிவிப்பது தான் ஷாத் ஆகும். ஒரு ஆசிரியரின் பல மாணவர்கள் அறிவித்ததை விட ஒரே ஒருவர் கூடுதலாக அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அது ஷாத் என்ற தரத்திற்கு இறங்காது.
முரணாக அறிவிப்பது வேறு! கூடுதலாக அறிவிப்பது வேறு! இந்த நுணுக்கமான வேறுபாட்டைக் கவனிக்காமல் நுனிப்புல் மேய்வதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.
15-3-2007 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார் என்று ஐந்து பேர் கூறுகிறார்கள். 15-3-2007 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிடவில்லை என்று ஒருவர் மட்டும் கூறுகிறார்.
இவ்விரு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகும். இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். ஒன்று உண்மையானால் மற்றொன்று தானாகவே பொய்யாகி விடும். இது தான் முரண்பாடு! இவ்வாறு வரும் போது அதிகமானவர்கள் கூறுவதை ஏற்க வேண்டும்.
15-3-2009 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார் என்று ஐந்து பேர் கூறுகிறார்கள். ஒருவர் மட்டும் 15-3-2009 அன்று காலை 10 மணிக்கு சலீம் சிக்கன் 65 சாப்பிட்டார் என்று கூறுகிறார். இவ்விரு செய்திகளும் முரண்பட்டவை அல்ல. ஒன்றை ஒன்று மறுக்கும் வகையில் இது அமையவில்லை.
கோழிக்கறி என்று பொதுவாகச் சிலர் கூறுகின்றனர். ஒருவர் மட்டும் உன்னிப்பாகக் கவனித்து அந்தக் கோழிக்கறி எந்த வகை என்பதையும் சேர்த்துக் கூறுகிறார். ஒன்றை ஏற்றால் இன்னொன்றை மறுக்கும் நிலை இங்கே ஏற்படாது. சிக்கன் 65 சாப்பிட்டதை ஏற்கும் போது கோழிக்கறி சாப்பிட்டதையும் சேர்த்தே ஏற்றுக் கொள்கிறோம்.
மூஸா இறந்து விட்டார் என்பதும், மூஸா இறக்கவில்லை என்பதும் முரண்!
மூஸா இறந்து விட்டார் என்பதும், மூஸா கடலில் மூழ்கி இறந்தார் என்பதும் முரண் அல்ல!
இந்த அடிப்படையில் மேற்கண்ட அறிவிப்பைக் கவனித்தால் ஸாயிதா கூறுவதும், மற்றவர்கள் கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல!
அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் கூறும் போது விரலை உயர்த்தினார்கள் என்று மட்டும் கூறுகிறார். ஸாயிதா கூறும் போது விரலை உயர்த்தி அசைத்தார்கள் என்று கூறுகிறார். அந்த இரண்டுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.
இது போல் சுஃப்யான், காலித் ஆகியோர் அறிவிக்கும் போது இஷாரா செய்தார்கள் என்று அறிவிக்கின்றனர். ஸாயிதா கூறும் போது அசைத்தார்கள் என்கிறார். இவ்விரண்டும் முரண் அல்ல!

No comments:

Post a Comment