Sunday, June 03, 2012

ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை,தொடர் : 12

பொறாமையால் ஏற்படும் தீங்குகள்
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ  - பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்ற இறுதி வசனத்தின் விளக்கத்தைக் காண்போம்.
ஒரு மனிதனிடமிருந்து நமக்குக் கேடு வருவதாக இருந்தால், பொறாமையினால்தான் கேடு வரும். நமக்கு எவன் கேடுசெய்தாலும் கண்டிப்பாக அதில் பொறாமை இருக்கும். அதனால்தான் தெரிந்தவர்களுக்குக் கேடுசெய்கிறார்கள். தெரியாதவர்களுக்கு மத்தியில் எந்தக் கேடும் நடப்பதில்லை.
நீங்கள் யார்? என்று எனக்குத் தெரியாவிட்டால் நான் யார்? என்று உங்களுக்குத் தெரியவில்லையென்றால் நீங்கள் எனக்கு எந்தக் கேடும் செய்ய மாட்டீர்கள். நானும் உங்களுக்கு எந்தக் கேடும் செய்யமாட்டேன். நீங்கள் உங்களது வேலையை மட்டுமே செய்துகொண்டிருப்பீர்கள். நான் எனது வேலையை மட்டுமே செய்து கொண்டிருப்பேன்.
ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கின்ற இருவர் டீக்கடையில் வேலை பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவ்விருவரில் ஒருவர் கோடீஸ்வரனாக ஆகிவிட்டால், நம்மோடு வேலைக்குச் சேர்ந்தவன் கோடிஸ்வரனாகி விட்டானே என்று தன்னைத் தானே அங்கலாய்த்துக் கொண்டு அவன் மீது பொறாமை கொள்கிறான். இவனைத் தவிர இன்னும் பல பேர் அடித்தட்டில் இருந்து முன்னேறி கோடிஸ்வர்ர்களாக ஆகியிருப்பார்கள். அவர்களைப் பார்த்து பொறாமை கொள்ள மாட்டோம்.
நம்மோடு ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்தவன். நாம் 100 மதிப்பெண் வாங்கும்போது இவன் 60 மதிப்பெண்தான் வாங்கினான். ஆனால் இன்று கலெக்டராக (மாவட்ட ஆட்சியர்) ஆகிவிட்டானே என்று மனம்தாங்கிக் கொள்ளாமல் பொறுக்காமல் அவன் மீது பொறாமை கொண்டு தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளக்கூடியவனையெல்லாம் நாம் உலகத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இப்படி இதுபோன்று பிறர் மீது பொறாமை கொள்பவன் பொறாமை கொண்டு, மற்றவன் மீது தவறான வதந்திகளைப் பரப்புவது, அவனுக்கு ஏதேனும் கேடுசெய்வது, அல்லது வேறெதாவது ஒன்றின் மூலம் பொறாமையினால் இடைஞ்சல்கள் கொடுத்துக் கொண்டே இருப்பது என பொறாமையால் பல விதமான கேடுகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

ஒருமனிதனின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு அவன் மீது பொறாமை கொள்பவனின் கெடுதலும் இருக்கும். பெரியளவுக்கு உங்களது வளர்ச்சி இருந்தால் உங்கள் மீது பொறாமை கொள்பவன் அதற்குத் தகுந்தமாதிரி பெரியளவுக்கு இடைஞ்சல்களையும் கேடுகளையும் செய்வான். உங்களது வளர்ச்சி சிறியளவுக்கு இருக்குமானால் பொறாமைக்காரனின் தீங்கும் அந்த வளர்ச்சிக்குத் தகுந்த மாதிரி இருக்கும். நீங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு முதலாளியாக இருந்தால் உங்களைத் திட்டும் அளவுக்கு அல்லது ஏதேனும் அவதூறு சொல்லும் அளவுக்கு உங்களது பொறாமைக்காரன் கெடுதல் செய்வான்.
ஆனாலும் அடிக்கிற அளவுக்கு போகமாட்டான். நீங்கள் மென்மேலும் மென்மேலும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தால் உங்கள் மீது பொறாமை கொள்பவனின் பொறாமையின் கேடும் வளர்ந்து கொண்டே போகும். எதுவெல்லாம் நமது வளர்ச்சிக்கு குறையையுயம் அபாயத்தையும் ஏற்படுத்துமோ அதையெல்லாம்கூட செய்வதற்கு தயங்க மாட்டார்கள். ஏன் நமது உயிருக்குக்கூட உலைவைக்க தயங்கமாட்டார்கள்.
அதனால், பொறாமைக்காரர்களின் தீங்குகளிலிருந்து நாம் பாதுகாப்புத் தேடவேண்டியது மிகமுக்கியமானதாகும். இன்னும் சொல்லப்போனால் பொறாமைதான் பிறருக்குத் தீங்கு செய்வதற்கே முதல் காரணமாக இருக்கிறது. அதனால்தான் பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது ஏற்படும் தீங்கிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்புத் தேடச் சொல்லித் தருகிறான்.
யார் யாரெல்லாம் நம்மீது பொறாமை கொள்கிறார்கள்? எப்படி எப்படியெல்லாம் பொறாமை கொள்கிறார்கள் என்றெல்லாம் நமக்கு எதுவும் தெரியாது. எனவேதான் ஏழு வானங்களுக்கும் மேல் அர்ஷிலிருந்து அனைத்து படைப்பினங்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுதான் சரியான வழியாகும்.
இன்னும் சொல்வதென்றால், ஒருவனுக்கு இறைவனால் கிடைக்கப்பட்ட அருட்கொடையைப் பார்த்து பொறாமைப்படுகிறான் என்றால் அதற்கு என்னிடம்தான் முறையிடவேண்டும் என்று சொல்லுகிறான் அல்லாஹ். எனவே வெளிப்படையில் ஏதேனும் நமக்குச் சந்தேகம் வந்தால், அல்லது நம் மனதிற்குள் தேவையற்ற சிந்தனைகள் வந்தால் பொறாமைக் காரன் பொறாமைப் படும்போதெல்லாம் நாம் திருப்பி எதுவும் செய்யத் தேவையில்லை. நாம் பதிலடி கொடுக்க வேண்டியதுமில்லை. யா அல்லாஹ்! என்மீது பொறாமைப் படுபவர்களின் பொறாமையிலிருந்து என்னைக் காப்பாற்று என்று அல்லாஹ்விடமே பாதுகாக்கின்ற பொறுப்பை சுமத்திவிட வேண்டியதுதான். நபிகள் நாயகம் அவர்களும் இதைப் பற்றி நமக்கு எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 6064,6065,6066,6724
ஒன்றுமே இல்லாமல் பிறரைப் பற்றி ஊகம் செய்வது, சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். வெறுமனே ""செய்தாலும் செய்திருப்பான், போனாலும் போயிருப்பான்'' என்றெல்லாம் பேசுவது கூடாது. ஒருவரைப் பற்றி முடிவெடுப்பதாக இருந்தால் தெளிவான ஆதாரங்களை வைத்து முடிவெடுக்க வேண்டும். அதற்கு பதிவுகள் இருக்கவேண்டும். ஒருவரைப் பற்றி அவதூறாக பேசவே வேண்டாம். ஒருவரைப் பற்றி ஆதாரங்கள் இல்லாமல் தவறான எண்ணம் கொள்வதே பெரும்பொய் என்று நபியவர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள்.
துருவித் துருவி ஆராயாதீர்கள். அதாவது ஒருவரைப் பற்றி உளவு வேலை பார்க்காதீர்கள். எதையாவது செய்திருப்பானோ என்று தவறாக நம்பி, அவனுக்குப் பின்னாலேயே போவது தவறான நடைமுறையாகும். மேலோட்டமாக நம்பிவிட்டு செல்லவேண்டியதுதான். ஒருவரைப் பற்றி துருவித் துருவி ஆராய்ந்தால். அவரை அல்லாஹ்வாக ஆக்குகிறோம் என்று அர்த்தமாகிவிடும்.
ஏனெனில் அல்லாஹ்தான் குறைகளற்றவன். என்னிடம் ஒரு குறை இருக்கும். அதுபோன்று உங்களில் ஒவ்வொருவரிடமும் ஒரு குறை இருக்கும். இப்படி கண்டுபிடித்ததினால் நாம் குறைகளே இல்லாத மனிதனாக ஆகிவிட முடியுமா? முடியாது என்பதே உண்மை. நீங்கள் பிறரது குறைகளைத் தேடுவீர்கள். ஆனால் இன்னொருவன் உங்களது குறைகளைத் தேடிக்கொண்டு திரிவான். எனவே எந்த மனிதர்களை எடுத்துக் கொண்டாலும் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யும். குறையே இல்லாத மனிதன் உலகத்தில் இல்லை. ஒருவரிடத்தில் குறைகள் குறைவாக இருக்கலாம். சிலரிடம் அதிகமாக இருக்கலாம். கண்முன்னே தெரிந்தால் கண்டித்துவிட்டு பேசாமல் இருக்க வேண்டியதுதான். அதைவிட்டு விட்டு துருவித் துருவி ஆராயும் வேலையை நாம் செய்யக்கூடாது. இப்படி பிறரது குறைகளைத் துருவித் துருவி ஆராய்வதினால் நமது உடலுக்கும் மனதிற்கும் கேடு என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். யாருக்கு எந்த நன்மை கிடைத்தாலும் பொறாமை கொள்ளாதீர்கள். நாம் பொறாமைக்காரனால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடுவது ஒருவிசயம்.
அதே நேரத்தில் நம்மாலும் பிறருக்குக் கேடுவரக்கூடாது என்பதை உணர்ந்துகொண்டு கொள்ள வேண்டும். அதனால்தான் நபியவர்கள் நீங்கள் பிறரின் மீது பொறாமை கொள்ளாதீர்கள் என்றும் சொன்னார்கள்.
ஒருவனுக்கு செல்வம் கிடைத்தால் அது இறைவனால் வழங்கப்பட்ட அருள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். ஒருவன் சிறந்த அறிவாளியாக இருந்தாலும் அதுவும் இறைவனால் கொடுக்கப்பட்டது என நினைக்க வேண்டும். ஒருவனுக்குப் பதவி, பட்டங்கள் கிடைத்தாலும் இறைவன் தான் நாடியவருக்கு அதைக் கொடுப்பான் என்று நினைத்து செயல்படுங்கள்.
இந்த ஹதீஸில் இறுதியாக, ""நீங்கள் உடன்பிறந்த சகோதரர்களைப் போன்று ஆகிவிடுங்கள்'' என்று நபியவர்கள் சொல்லுகிறார்கள். நமது சகோதரர்கள், பிள்ளைகள்  நன்றாக வந்தால் நாம் பூரிப்படைவோமே அதைப் போன்று நமது நண்பர்கள், அண்டை வீட்டர்ôகள்இப்படி பிறருடைய அருளுக்காக மகிழ்ச்சியடைந்து மனதை நிம்மதிபடுத்திக் கொள்ளுங்கள் என நபியவர்கள் நமக்கு உபதேசிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள், ""பிஸ்மில்லாஹி யுப்ரீக்க, மின் குல்லி தாயின் யஷ்ஃபீக்க, மின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத, ஷர்ரி குல்லி தீ அய்னின்'' என்று ஓதிப்பார்ப்பார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (ஓதிப் பார்க்கிறேன்). அவன் உங்களுக்கு குணமளிப்பானாக! அனைத்து நோயிலிருந்தும் உங்களுக்குச் சுகமளிப்பானாக. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் (காப்பானாக!).
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 4402,4403
நபியவர்களுக்கு எப்போது நோய் ஏற்பட்டாலும் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபியவர்களுக்கு ஓதி துஆச் செய்வார்கள். அப்படி பிரார்த்திக்கும் போது பொறாமைக்காரனின் பொறாமையினால் ஏற்படும் தீமையிலிருந்தும் பாதுகாப்பதற்கு பிரார்த்திப்பார்கள். கண்பார்வையிலிருந்தும் பாதுகாப்பு தேடுவார்கள். இதற்கு கண்ணேறு, திருஷ்டி என்றும் சொல்லுவார்கள். இந்த திருஷ்டிக்கெல்லாம் காரணமே பொறாமைதான்.
கண்திருஷ்டி என்பது என்ன? கண்ணால் ஒருவரைப் பார்த்தவுடன் எதுவும் நடக்காது. கண்ணால் ஒருவரைப் பார்ப்பதினால் வீழ்த்த முடியாது. பிறகு கண்திருஷ்டி என்றால் ஒருவனின் பொறாமை அல்லது வயிற்று எரிச்சல் என்றுதான் விளங்கிக் கொள்ளவேண்டும். பார்ப்பதினாலேயே ஒருவனை வீழ்த்துவதற்கு ஆற்றல் மிக்கவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.
வயிற்று எரிச்சல் என்பது ஒருவகையான பிரார்த்தனைதான். வாயால் இறைவனிடம் கேட்காமல் மனதினால் நினைத்து நினைத்து பொறாமை கொண்டு வயிற்று எரிச்சல் அடையும் போது, ஒருநேரமில்லாவிட்டாலும் ஒருநேரம் பிரார்த்தனைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படலாம். கண்ணால் பார்த்துவிட்டு அவனது வயிறு எரிவதைத்தான் கண்திருஷ்டி என்று நபியவர்கள் சொல்லுகிறார்கள். அதனால்தான் ஜிப்ரயீல் அவர்கள் பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் என்றும் கண்ணை விட்டும் என்றும் பிரார்த்திக்கிறார்கள். எனவே பொறாமையினாலும் கேடு விளையும், நோய் ஏற்படும் என்றெல்லாம் விளங்குகிறது.
ஒருவன் நேரடியாக வந்து நம்மை வெட்டுகிறான் குத்துகிறான் என்றால் அது ஒருவகைக் கேடு. அது இல்லாமல், ஒருவன் நம்மைப் பார்த்துவிட்டு ஏங்குவான், அதனால் பொறாமையில் வயிற்று எரிச்சல் அடைவான். இதுவும்கூட நம்மை வீழ்த்திவிடும். அதனால் பிறர் வயிறு எரியாமல் நமது அணுகுமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு, ஒருவன் பணக்காரனாக இருக்கிறான். அவனது வீட்டிற்கு அருகிலுள்ளவன் ஏழையாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பணக்காரன் 5 கிலோ கறி வாங்கிச் சாப்பிடுகிறான் என்றால் அருகிலுள்ள ஏழைக்கு ஒரு கால்கிலோ கறியையாவது கொடுத்து சாப்பிடவேண்டும். அப்படிக் கொடுத்து சாப்பிடும்போது அவன் வயிறு எரியமாட்டான். ஆனால், இந்தப் பணக்காரன் மட்டும் கிலோ கணக்காக கறியை வாங்கிவைத்து சாப்பிடுகிறான். பக்கத்து வீட்டுக்காரனை கவனிக்க வில்லையெனில் அந்த ஏழை ஏங்குவான். அதனால் வயிறு எரிவான். இந்த வயிற்று எரிச்சல் சில வேலை பிரார்த்தனையாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதினால் பணக்காரனுக்கு கேடு நிகழ்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும்.
யா அல்லாஹ்! அவனுக்கு மட்டும் இப்படிக் கொடுத்திருக்கிறாயே! எனக்குக் கிடைக்கவில்லையே! என்று ஏங்கி வயிறு எரிவதில், இறைவா! இவனுக்கு எதையாவது நோவினையாகக் கொடு! என்ற பிரார்த்தனை அவனது வயிற்று எரிச்சலுக்குள் அடங்கியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். அதனால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. கண்ணிலிருந்து ஒரு சக்தி கிளம்பி வந்தெல்லாம் நம்மைப் பாதிக்கவில்லை. எனவே பாதிப்புக்குக் காரணம் ஹஸத்-பொறாமைதான். வயிற்று எரிச்சல்தான் என்பது இந்த முஸ்லிம் கிரந்ததத்தில் பதிவு செய்யப்பட்ட செய்தி நமக்கு விளக்குகிறது.
எனவே நாம் பிறர் மீது பொறாமைப்படவும் கூடாது. நம்மீது பொறா மைப்படும் பொறாமைக்காரனின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருக்க வேண்டும்.
எனினும் இரண்டு விசயத்தில் பொறாமைப்படுவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி உள்ளது. அந்த இரண்டு விசயத்தை நபியவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு
மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல்: புகாரி 73,1409,5025,5026,7141,7316,7529 முஸ்லிம் 1484,1485,1486
ஒருமனிதனுக்கு அல்லாஹ் செல்வத்தை வாரிவழங்கியிருக்கிறான். அதில் பொறாமைப்படக்கூடாது. அந்த செல்வத்தை இறைப்பணியில் நல்வழியில் வாரிவாரி அள்ளி கொடுக்கிறான். இதில் பொறாமைப் படவேண்டும். யா அல்லாஹ்! இப்படி செல்வத்தை தாருமாறாக பிறருக்கு அள்ளிக் கொடுக்கிறானே! யா அல்லாஹ்! அதைப்போன்று எனக்கும் தந்தால் நானும் அள்ளிக் கொடுப்பேனே! என்று அள்ளிக் கொடுப்பதற்கு பொறாமை கொள்ளவேண்டும். காசுபணம் வேண்டுமென்று பொறாமைப் படக்கூடாது. பணக்காரனைப் பார்த்து பொறாமைப்படக்கூடாதுதான்.
பணக்காரனாக இருந்து இவ்வுலக வாழ்வில் மூழ்கி மறுமையை மறந்து உலகமே சுவர்க்கம் என்று போலித்தனமாக நம்பி இவ்வுலக வாழ்க்கையில் சொகுசாக வாழ்கிற பணக்காரனைப் பார்த்து பொறாமைப் படக்கூடாது. மாறாக, பணக்காரனாக இருந்து அந்தப் பணத்தையெல்லாம் பிறரது மருத்துவத்திற்காகவும், பிறரின் தொழில்துறைக்காகவும், பிறரது கல்விக்காகவும் சமூகத்திற்கு செலவு செய்கிறவனைப் பார்த்து, நன்மைகளைக் கொள்ளை அடிப்பவனைப் பார்த்து இவனைப் போன்று எனக்கும் இறைவன் தந்தால் நானும் இப்படி செலவு செய்வேனே! அளப்பரிய நன்மைகளை அடைவேனே! என்று பொறாமைப்படவேண்டும்.
இப்படி மார்க்கத்திற்காகவும் சமூகத்திற்காகவும் அள்ளிக் கொடுப்பவனைப் பார்த்து என்னையும் இப்படி ஆக்கு என்று இறைவனிடம் பிரார்த்திப்பதன் அர்த்தம், நானும் அவனைப் போன்று பொருளாதாரத்தை நன்மையான வழியில் செலவுசெய்வேன் என்பதாகும். இப்படி பொறாமைப்படுவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது.
அடுத்ததாக, ஒரு மனிதனுக்கு சிறந்த அறிவை ஞானத்தை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதன்மூலம் அவர் நன்றாக நியாயமான தீர்ப்பளிக்கிறார். அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கிறார். அதன் மூலம் மக்களுக்குப் போதனை செய்கிறார். இவரைப் பார்த்து நானும் இவரைப் போன்று மக்களுக்கு நல்லவழியைக் காட்டித்தர வேண்டும், நானும் மக்களுக்கு நன்றாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று பொறாமைப் படுவதற்கும் அனுமதியுண்டு.
அறிவில் பொறாமைப்பட்டுவிடக்கூடாது. அறிவை நல்வழியில் செலவிடுவதில் பொறாமை கொள்ள வேண்டும். காசுபணத்திற்குப் பொறாமை கொள்ளக்கூடாது. காசுபணத்தை நல்வழியில் செலவிடுவதில் பொறாமை கொள்ள வேண்டும். இவனுக்கு காசுபணத்தைக் கொடுத்துவிட்டாயே! அதை இல்லாமல் ஆக்கிவிடு! என்று சொன்னால் அதற்குப் பெயர்தான் பொறாமை. இப்படிப் பொறாமை கொள்வது கூடாது. பொறாமைப் பற்றி இவ்வளவுக்கு புரிந்து கொள்வது போதுமானது.
ஆக, பொறாமை கொள்பவன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்ற இந்த வசனத்தோடு இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது.
மீண்டும் ஒரு தடவை இரண்டு அத்தியாயங்களையும் தொகுத்துப் பார்த்துக் கொள்வோம்.
قُلْ - (குல்) நபியே நீர் சொல்வீராக!
بِرَبِّ النَّاسِ أَعُوذُ - (அவூது பிரப்பின்னாஸ்) மனிதர்களின் கடவுளிடத்தில் (மனிதர்களைப் படைத்துப் பரிபாலிப்பவன்) நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
ரப் என்றால் படைத்துப் பரிபாலிப்பவன் என்று அர்த்தம். படைத்துப் பரிபாலிப்பவனிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
مَلِكِ النَّاسِ - (மலிக்கின்னாஸ்) மக்களின் அரசன் (சொந்தக்காரண், உடமையாளன்).
மனிதர்களின் சக்கரவர்த்தி. ஒருமனிதன் ஒரு நாட்டுக்கு ஊருக்கு வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம். ஆனால் மனித சமூகத்திற்கே அரசனாக இருக்கிறவனிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்.
إِلَهِ النَّاسِ - (இலாஹின்னாஸ்) மனிதர்கள் வணங்குவதற்குத் தகுதியான(கடவுள்)வன்.
மனிதர்களின் வணக்கங்களுக்கெல்லாம் உரியவன் அவன்தான்.
இலாஹ் என்றால் வணக்கத்திற்குரியவன் என்று அர்த்தம். எனவே மனிதர்களின் வணக்கங்களுக்கெல்லாம் சொந்தக்காரனாகிய
அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன். இப்படி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடும்போது மூன்று பண்புகளைச் சொல்லுகிறான். ஒன்று, என்னை ரப்பு என்று ஒத்துக்கொள். அதாவது உன்னைப் படைத்துப் பரிபாலிப்பவன் நான்தான். உனக்கு ராஜா நான்தான். உன்னுடைய வணக்கத்திற்கெல்லாம் சொந்தக்காரன் நான்தான். இப்படிப்பட்ட அல்லாஹ்விடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று சொல்லவேண்டும்.
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ - (மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ்) மறைந்திருந்து தவறான எண்ணங்களை (வஸ்வாஸ்) ஏற்படுத்துகிற தீங்கிலிருந்து.
தீய எண்ணங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும்
الْخَنَّاسِ - மறைந்திருப்பவன் (ஒளிந்திருப்பவன்)
மறைமுகமாக இருந்து கொண்டு தீய எண்ணங்களை உண்டாக்குவது. நேரடியாக நம்மைத் தாக்காமல் மறைந்திருந்து, அதாவது கன்னாஸ் என்றால் மறைந்திருந்து தீங்கை ஏற்படுத்துபவனின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். 
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ - (அல்லதீ யுவஸ்விஸு ஃபீ சுதூரின்னாஸ்) மனிதர்களின் உள்ளங்களில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துகிறவன்.
மனிதர்களின் உள்ளங்களில் தவறாக எண்ணங்களை ஏற்படுத்துவார்களே அந்தத் தீங்கிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ - (மினல் ஜின்னத்தி வன்னாஸ்) (இத்தைகையவர்கள்) ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ளனர்.
இப்படி செய்யக்கூடியவர்கள் மனிதர்களிலும் இருக்கிறார்கள். ஜின்களிலும் இருக்கிறார்கள். அதாவது மனிதர்களிலிருலிந்து கெட்டவர்கள் தீய எண்ணங்களை என்னிடத்தில் ஏற்படுத்துவதிலிருந்தும் என்னைக் காப்பாற்றிவிடு. ஜின்களிலிருந்து கெட்டவர்கள் தீய எண்ணங்களை என்னிடதில் ஏற்படுத்துவதிலிருந்து என்னைக் காப்பாற்றிவிடு என்று இப்படி நம்மை பாதுகாப்பைத் தேடச்சொல்லி குர்ஆனின் 114 வது
அத்தியாயத்தில் நமக்குக் கட்டளையிடுகிறான்.
قُلْ - (குல்) நபியே! நீங்கள் சொல்லுங்கள்.
أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ - (அவூது பிரப்பில் ஃபலக்) அதிகாலையின் (வைகறைப் பொழுது) இரட்சகனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று சொல்லுங்கள்.
வெளிச்சத்தினுடைய அதிகாலையுடைய விடியற்காலையுடைய இறைவனிடத்திலே பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபியே சொல்வீராக. எனவே வெளிச்சத்திற்கு அவன்தான் சொந்தக்காரன். அவன் நினைத்தால் சூரியனை உதிக்காமல் ஆக்கிவிட்டால் எப்போதுமே இருட்டாகத்தான் இருக்கும். வெளிச்சத்திற்கு சொந்தக்காரனாக இருக்கிற காரணத்தினால் அவனிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.
مِنْ شَرِّ مَا خَلَقَ - (மின் ஷர்ரி மா கலக்) அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து (நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
அவன் படைத்திருக்கிற எல்லாப் பொருட்களின் தீங்கிலிருந்தும் அதாவது அவன் எதைப் படைத்திருந்தாலும் அதில் தீங்கும் இருக்கிறது. சோற்றில் தீங்கு இருக்கிறது. பிரியாணியில் தீங்கு இருக்கிறது. இந்த மைக்கில்கூட தீங்கு இருக்கிறது. நல்லதும் இருக்கிறது. தீங்கு மட்டும் எனக்கு வரக்கூடாது. நல்லதாகவே வந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் எப்படியெல்லாம் தீங்கு வரும் என்பதையும் நாம் விளக்கியிருக்கிறோம். எனவே அவன் படைத்திருக்கின்ற படைப்பின் அனைத்துத் தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன். 
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ - (வமின் ஷர்ரி காஸிக்கின் இதா வகப்) பரவும் இருளின் தீங்கை விட்டும் (நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபியே கூறுவீராக)
இருள் வந்து சூழ்ந்து கொள்ளும்போது ஏற்படுகிற தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லது சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும்போது நடக்கவிருக்கிற தீங்கை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ - (வமின் ஷர்ரின் னஃப்பாஸாத்தி ஃபில் உகத்) முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் (நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபியே கூறுவீராக)
தலைமாட்டில் உட்கார்ந்து முடிச்சுகளைப் போட்டுக் கொண்டு அதிகாலைத் தொழுகைக்கு எழுந்திருக்க விடாமல் முடிச்சுகளில் ஊதுகிற ஷைத்தான்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். 
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ  - (வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்) பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனால் என்னவெல்லாம் தீங்கு ஏற்படுமோ அதிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நீ சொல்லு என அல்லாஹ் நமக்கு கட்டளையிடுகிறான். குல் சொல்லு, கூறு என்று சொல்லுகிறான்.
இதை ஒவ்வொரு நாளும் இரவில் நாம் படுக்கைக்குச் செல்லும் போது சொல்லிக் கொண்டால், துன்பங்கள் வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டோமானால், இந்த மேற்சொன்ன கேடுகளில் எந்தக் கேடாவது நமக்கு வரும் என நினைக்கும் போதெல்லாம் இவைகளைச் சொல்லிக் கொள்ளலாம். எவனோ நம்மீது பொறாமைப் படுகிறான் என்ற நினைப்பு வருகிறதென்றால் இந்த இரண்டு அத்தியாயங்களையும் ஓதிக்கொள்ளலாம். எவனாவது நம்மிடம் வஸ்வாஸை உண்டுபண்ணி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டு போகிறான் என்று நினைக்கும் போதெல்லாம் இந்த இரண்டு சூராக்களையும் ஓத வேண்டும்.
திடீரென மின்சாரம் (கரண்ட்) நின்றுவிட்டால் நமக்கு ஏதாவது உள்ளத்தில் சலனம் ஏற்படும். ஏனெனில் இருட்டைக் கண்டுதான் பேய்பிசாசு போன்ற தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது. இரட்டைக் கண்டு உள்ளத்தில் சலனம் ஏற்பட்டாலும் இந்த அத்தியாயங்களை ஓதலாம். ùனில் குல் அவூது பிரப்பில் ஃபலக் என்றால், வெளிச்சத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று சொல்லும்போது நம்மை இறைவன் பாதுகாக்கிறான் என்று உணர வேண்டும்.
இப்படி இந்த சூராவில் சொல்லப்பட்ட விசயங்களை நாம் சந்திக்கும் போதெல்லாம், கெட்ட எண்ணங்கள் வரும்போது, இருட்டைக் காணும் போது, கிரகணம் ஏற்படும் பொழுது, ஷைத்தான் நம்மை வீழ்த்திவிடுவான் என்று நினைக்கும் போது, பொறாமைக்காரன் நம்மீது பொறாமைப்படுவான் என்று நினைக்கும் போதெல்லாம் இந்த இரண்டு அத்தியாயங்களை ஓதி பாதுகாப்புத் தேடிக் கொள்ளவேண்டும் என்கிற இரண்டு கவசங்களாக அல்லாஹ் தந்திருக்கிறான். எனவே இந்த இரண்டு சூராக்களையும் அதற்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்! அல்லாஹ் நம்மனைவரையும் நேரான வழியில் நடத்துவானாக!!

No comments:

Post a Comment